வீரப்பெருமாநல்லூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளின்றி கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
பண்ருட்டி ஒன்றியம், வீரப்பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பழைய மற்றும் புதிய காலனியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இந்தப் பகுதியில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: புதுகாலனி, 3-ஆவது தெருவில் சிமென்ட் சாலை அமைத்தபோது, சுமார் 100 அடி தொலைவுக்கு மட்டும் சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர்.
இதனால், அந்தப் பகுதி மழைக் காலங்களில் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. காலனியில் காலி இடங்கள், சாலை ஓரங்களில் கழிவுநீர், மழை நீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. இதனால், கொசுத் தொல்லை அதிகரித்து நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. ஆனால், போதிய அழுத்தம் இல்லாமல் குடிநீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டு, சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவிளக்குகள் எரிவதில்லை. இந்தப் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் உரிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.