கடலூர் அரசு பெரியார் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மத்திய அரசின் ஆர்யூஎஸ்ஏ திட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு பல்கலைக்கழக கடல்சார் உயிரியல் பிரிவு இயக்குநர் (பொ) என்.வீரப்பன், தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ப.குமரன் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ) என்.கிருஷ்ணமோகன் முகாமை தொடக்கி வைத்தார். கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
முகாமில், மொத்தம் 70 மாணவ, மாணவிகள் மீன் வளர்ப்பு, அழகுக்கலைப் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு மாதம் கல்லூரியிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள், புத்தகம் வாசித்தலின் அவசியம், ஒழுக்கம் போற்றுதல் குறித்தும் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசுக் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆர்.ராஜகுமார், பல்கலைக்கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். பல்கலைக்கழக மொழியில் துறை இயக்குநர் ஆர்.சரண்யா நன்றி கூறினார்.