கடலூரில் மின் திட்டப் பணியின்போது கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சிப் பகுதி மக்களுக்கு கேப்பர் மலையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கடலூரில் மின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் பூமிக்கு அடியில் மின் வயர்கள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கோண்டூர், சாவடி, ரட்சகர் நகர், செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் மற்றும் தெருக்களில் பள்ளம் தோண்டி வயர்களை புதைத்து வருகின்றனர்.
இதற்காக ரமணா நகரில் பள்ளம் தோண்டியபோது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அந்தப் பகுதியில் சாலை, வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை உடனடியாகச் சரிசெய்யவும், மின் துறையினர், ஒப்பந்ததாரர்கள் நகராட்சி உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வயர் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.