காவல் நிலையம் சென்றவர் மரணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
By DIN | Published On : 10th September 2019 08:33 AM | Last Updated : 10th September 2019 08:33 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார், கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். போலீஸார் அவரை அடித்துத் துன்புறுத்தியதால்தான் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனித உரிமை மீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நடத்துநர் உயிரிப்பு தொடர்பாக டிஜிபியிடம் புகார்: கடலூரில் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடத்துநர் கோபிநாத் காவலரிடம் அடையாள அட்டை கேட்டதற்கு, அவரை காவலர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து, நடத்துநர் மயக்கமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. உயிரிழந்த கோபிநாத்தின் குடும்பத்துக்கு இழப்பீடோ, அரசு வேலையோ வழங்கப்படவில்லை. காவலர்கள் பணியில் இருக்கும்போது அவர்களது பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில், நடத்துநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஏன் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? இதுதொடர்பாக டிஜிபியை சந்தித்து மனு அளிப்போம் என்றார் அவர்.