பண்ருட்டி அருகே காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்விழி கடந்த 21-ஆம் தேதி காவலர்களுடன் மதுக் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாளிகம்பட்டு தரைப்பாலம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மொபெட்டில் 125 லிட்டர் சாராயம் கடத்தி வந்த மாளிகம்பட்டைச் சேர்ந்த பெ.பத்மநாபன் என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இவர் மீது காடாம்புலியூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவரின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் விதத்தில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார்.
அதன் பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பிறப்பித்தார். பத்மநாபனை ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணை கடலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.