வழக்குகளை சமரச முறையில் தீர்க்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து சார்பு நீதிபதி கே.ஜோதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காகவும், முந்தைய வழக்குகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்காகவும் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 14-ஆம் தேதி (சனிக்கிழமை) விசாரணை நடத்திட உள்ளது.
இந்தப் பணிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறுகின்றன. எனவே, வழக்காளிகள் தங்களது வழக்குகளை இந்த நீதிமன்றத்தில் சமாதானமாக முடித்துக் கொள்ளலாம். மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் இந்தப் பணியின்போது, முதன்மை மாவட்ட நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி தலைமையில், அனைத்து நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று வழக்குகளுக்கு சமரச முயற்சிகள் மூலம் தீர்வு செய்கின்றனர். எனவே, வழக்காடிகள் அனைவரும் தங்களது வழக்குரைஞர்களுடனும், தகுந்த ஆவணங்களுடனும் நேரில் ஆஜராகலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.