கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 3, 4 சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது அவர், பெண்களால் இந்த உலகம் முன்னேறி வருகிறது. ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் உயர்ந்துள்ளனர். பெண்கள் படித்தால் மட்டுமே பொருளாதாரத்தில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மற்றவர்களையும் முன்னேற்றமடையச் செய்ய முடியும். எனவே, பெண்கள் பெண் குழந்தைகளை வெறுக்காமல் அவர்களை படிக்க வைத்து இந்த சமுதாயத்துக்கு கடமையாற்ற விட வேண்டும். பெண்களை மாணவர்கள் மதித்து போற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி பேசுகையில், இந்தியாவில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக இருந்த முதல் 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு பெண்கள் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. அதில், நமது கடலூர் மாவட்டமும் ஒன்றாக இருந்தது. எனவே, பெண் குழந்தைகள் பிறப்பினை போற்ற வேண்டும் என்றார்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ப.செல்வகுமாரி வரவேற்க, சு.அருள்ஜோதி செல்வி நன்றி கூறினார்.