இலவச திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க சிறுபான்மையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் உதவியுடன் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாள்கள் அளிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் வீதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்ஸியர்கள், ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறுவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், 55 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
பயிற்சியின் போது ரூ.1,534 உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான நேர்காணல் வாலாஜாபாத்தில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. எனவே, பயிற்சி பெற விரும்புவோர் அசல் ஜாதி சான்று, வருமானச் சான்று, ஆதார் அட்டை, கல்விச் சான்று ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மனோகரன் - 89398 13412, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 044-28514846 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.