நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் சாய்ந்த மண் வெட்டும் இயந்திரத்தை நிலை நிறுத்தும் பணியில் தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதுடன், அனல் மின்நிலையங்கள் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சுரங்கப் பகுதியில் மண்ணை வெட்டி எடுத்து அப்புறப்படுத்துவதற்காக பெரிய அளவிலான மண் வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், சுரங்கம் 1-இல் இருந்து சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்துக்கு மண் வெட்டும் இயந்திரம் எண்: 1573 நகர்த்தப்பட்டது. அப்போது, கரி பங்கர் அருகே வந்தபோது மண் உள்வாங்கியதால் மண்வெட்டும் இயந்திரம் சாய்ந்தது. இதையடுத்து சாய்ந்த மண் வெட்டும் இயந்திரத்தை நிலை நிறுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.