நெய்வேலி அருகே வியாழக்கிழமை மாலை ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
நெய்வேலியை அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தில் தூய இருதய மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
முதனை, இருப்புகுறிச்சி, எடக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசக்குழியில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமே பயணித்து வருகின்றனர்.
இருப்புகுறிச்சி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7-ஆம் வகுப்பு மாணவி சோனா ஆப் ஆர்க், பிளஸ் 2 மாணவர்கள் கதிரவன், முகேஷ், ஆசிரியை மார்கரேட் ஆகியோர் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
ஆட்டோ முதனை-அரசக்குழி பிரதான சாலையில் சக்கரைக்குளம் ஏரி அருகே சென்ற போது வளைவில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதில் மாணவர்கள், ஆசிரியை மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராய் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஊ.மங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.