சேராக்குப்பம் கிராமத்தில் கிளை நூலகக் கட்டடம் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாகியும் திறப்பு விழா காணாமல் உள்ளது.
வடலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சேராக்குப்பம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள், மாணவர்கள் பயனடையும் வகையில் கடந்த 2011-12-ஆம் ஆண்டு அப்போதைய கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கிளை நூலகக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், இந்த நூலகம் திறப்பு விழா நடத்தப்படாமல் 7 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது. மேலும், இந்த நூலகத்துக்காக ஒதுக்கப்பட்ட புத்தகங்கள் என்ன ஆனதென்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, கிளை நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.