கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 3,283 வழக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன.
தேசிய, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூரில் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி தலைமை வகித்து, மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து பேசினார்.
மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 5,981 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 3,283 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலமாக ரூ.18.86 கோடி நிவாரணத் தொகையாக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
குடும்ப நல வழக்குகளில் 27 வழக்குகளுக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. மோட்டார் வாகன விபத்து தொடர்பாக 467 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.11.66 கோடி வழங்கிடவும், சிவில் வழக்குகளில் 66 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4.34 கோடி வழங்கிடவும், சிறு வழக்குகளில் 1,296 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10.79 லட்சம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டது. என்எல்சி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் ரூ.2.19 கோடி வழங்கிட உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நீதிபதிகள் கே.அய்யப்பன்பிள்ளை, ஜி.செந்தில்குமார், எ.திருவேங்கடசீனிவாசன், தலைமை குற்றவியல் நீதிபதி எம்.மூர்த்தி மற்றும் சார்பு நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான கே.ஜோதி நன்றி கூறினார்.
நெய்வேலி: நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நெய்வேலி நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி எம்.சாதிக் பாஷா தலைமையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் ஜி.அபர்ணா முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 21 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளர்களுக்கு ரூ.17.80 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மக்கள் நீதிமன்ற உறுப்பினராக வழக்குரைஞர் பி.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் கே.புவனேஸ்வரி செய்திருந்தார்.
பண்ருட்டி: பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பண்ருட்டி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-1 கற்பகவள்ளி தலைமை வகித்தார். உறுப்பினர்களாக ராஜசேகரன், சிவராஜன் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 874 வழக்குகள்
விசாரணைக்கு ஏற்கப்பட்டு ரூ.1,64,49,250-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் சையத் ரஷீத் செய்திருந்தார்.