கடலூரில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு ஒழிப்பு, மத்திய அரசின் போஷான் அபியான் திட்டம், மழை நீர் சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை கடலூர் நகர அரங்கில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தூய்மைக் காவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் சுமார் 500 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடக்கி வைத்தார்.
பேரணியாகப் புறப்பட்டவர்கள் பாரதி சாலையில் 100 மீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே, அதாவது கடலூர் நகர அரங்கிலிருந்து நகராட்சி பூங்கா வரை மட்டுமே சென்று திரும்பினர். பேரணியில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி இயக்க திட்ட அலுவலர் த.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.