கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மதுக் கடை சுவரில் துளையிட்டு பணப்பெட்டியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், விருப்பாட்சி கிராமத்தில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக ராமலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு விற்பனையை முடித்துக்கொண்டு ராமலிங்கம் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை அந்த வழியாகச் சென்றவர்கள் மதுக் கடை சுவரில் பெரிய அளவிலான துளை இடப்பட்டிருந்ததை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பணப்
பெட்டியுடன் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை ஒலிப்பானுக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அந்தப் பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பெட்டியில் பணம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், டாஸ்மாக் கடையிலிருந்த மதுப் புட்டிகள் திருடப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 மதுப் புட்டிகள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.