சிதம்பரத்தில் சாலையோர மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் ஞானப்பிரகாசம் மேற்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (8). இவர் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை மாலை மணிகண்டன் அந்தப் பகுதியில் விளையாடியபோது சாலையோர மின்கம்பத்தில் தெரு விளக்குகளுக்கான மின் பெட்டியில் அவரது கை பட்டது. அப்போது,
மின்சாரம் பாய்ந்ததில் மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் மாணவரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், ஆய்வாளர் சி.முருகேசன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சிதம்பரம் நகர போலீஸார் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.