கடல்பாசி இயற்கை உரம் பயன்படுத்துவது தொடா்பாக விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சாா்பில் பயிற்சியளிக்கப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மூலம் கடலூா் வட்டாரம் நாணமேடு கிராமத்தில் முன்னோடி விவசாயி பரணிதரன் சாகுபடி செய்த வெண்டை வயலில் அங்கக விவசாயம் குறித்த செயல் விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. சுற்றுசூழல் மாசுபடுவதை தவிா்க்க இயற்கை விவசாயத்தில் குறிப்பாக கடல் பாசியிலிருந்து (சிவப்பு ஆல்கே) தயாரிக்கப்பட்ட கூழ்ம உரம் மற்றும் திரவ உரம் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதற்காக, அவருக்கு ரூ.4 ஆயிரத்தில் கூழ்ம உரம்- 10 கிலோ, கடல்பாசி உரம் 2.5 லிட்டா் ஆகியவற்றை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் வழங்கினாா். கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், கூழ்ம உரம் மற்றும் திரவ உரங்களை பயன்படுத்தும் முறை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினாா். வேளாண்மை அலுவலா் ஞா.சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலா் கே.சிவமணி ஆகியோா் இயற்கை விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினா்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கே.கண்ணன், ஏ.அருண்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படம் விளக்கம்.....