கடலூர் உழவர் சந்தைக்கு நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை சரிந்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் இந்துக்களிடம் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. ஏற்கெனவே காய்கறிகளின் விலை உயர்ந்திருந்த நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக உழவர் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கடலூர் உழவர் சந்தையில் உள்ள 90 கடைகளில் தினமும் 120 விவசாயிகள் தங்களது விளை பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இங்கு சராசரியாக தினமும் 25 டன் காய்கறிகளும், 5 முதல் 7 டன் வரை பழங்களும் விற்பனையாகின்றன. ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை விற்பனை நடைபெறுகிறது.
தற்போது, மாவட்டத்தில் பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தும் அதிகரித்துள்ளதால் அதன் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் குறைந்துள்ளதாக கடலூர் உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் சீனிவாசபாரதி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த மாதம் இதே நாளில் ரூ.14-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் கடந்த மாதம் கிலோ ரூ.56-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.40 முதல் ரூ.42 வரை விற்பனையாகிறது. கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையான முருங்கைக்காய் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், ரூ.15-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.10 முதல் ரூ.12-க்கும், கிலோ ரூ.50-க்கு விற்பனையான பீன்ஸ், கேரட் ஆகியவை ரூ.30-க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.42 வரை விற்பனையாகிறது. கடந்த மாதம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.23-க்கு விற்பனையானது. மழைக் காலத்தில் பூமிக்கடியில் விளையும் காய்கறிகள் விரைவில் அழுகிவிடும் என்பதால் அவற்றின் வரத்து குறைவதும், விலை அதிகரிப்பதும் வழக்கமானதே என்றும் சீனிவாசபாரதி தெரிவித்தார்.