காட்டுமன்னார்கோவில் அருகே ம.ஆதனூரில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணியை பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள ம.ஆதனூர், நாகை மாவட்டம், குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தலைமதகுடன் கூடிய கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, ரூ.396.41 கோடி செலவில், கதவணை கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.ராமமூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெள்ள உபரி நீரைப் பயன்படுத்தும் வகையில், தமிழக முதல்வரின் உத்தரவின்படி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம் - தூத்தூர், தஞ்சை மாவட்டம் - வாழ்க்கை, நாகை மாவட்டம் - மாதிரிவேளூர், கடலூர் மாவட்டம் - கருப்பூர் ஆகிய இடங்களில் ஒருவழிப் பாதையுடன் கூடிய கதவணைகளும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், திருகழிப்பாலை, நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், அளக்குடி ஆகிய கிராமங்களுக்கு இடையே கடல் நீர் உள்புகுவதை தடுக்கும் வகையில் தடுப்பணைகளும் கட்டுவதற்கான திட்டங்கள் அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளன.
அதற்கான இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதற்கான முதல் கட்ட பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ம.ஆதனூரில் கதவணை கட்டும் பணியை ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் கடந்த வாரம் மழைநீர் அதிகளவு சென்றதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இப்பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர். ஆய்வின்போது, திருச்சி மண்டல பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் (திட்டம் உருவாக்கம்) கே.பொன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.