பூண்டி ஊராட்சியில் அரசின் வீடு கட்டும் திட்டத்துக்கு மணல் எடுக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டுவதற்கான உரிமைப் பெற்றவர்களுக்கு மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் அரசு திட்டங்களுக்கு மட்டும் மணல் எடுக்கும் வகையில் குவாரிகள் அமைக்கப்பட்டன. அந்த குவாரிகளில் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பயனாளிகள் மணல் எடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
இதன்படி, கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டவர்களுக்கு கடலூர் அருகே உள்ள விசுவநாதபுரம் தென்பெண்ணையாற்றில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்காக, கடந்த 19-ஆம் தேதி மணல் அள்ளச் சென்ற 50 டிராக்டர்களை அப்பகுதி மக்கள் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெளியேற்றினர்.
அதே நேரத்தில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தினர் அக்கடவல்லி மணல் குவாரியில் மணல் அள்ளிச் சென்றனர்.
இதன்படி, திங்கள்கிழமை அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியம், பூண்டி ஊராட்சி, தட்டைகுளத்தில் மணல் எடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவர்களுடன் அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் மணல் அள்ளும் பணி நடைபெறவில்லை.