பண்ருட்டி நகரப் பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பண்ருட்டி நகரில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், நகரில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மேலப்பாளையம், போலீஸ் லைன், லட்சுமிபதி நகர், கடலூர் சாலை, திருவதிகை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.