கடலூர் பேருந்து நிலையத்தில் பணம் வசூல் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மண்டலச் செயலர் சு.திருமாறன், மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன் ஆகியோர் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனு: கடலூர் பெருநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு பழ வியாபாரிகள் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய நகராட்சி நிர்வாகம் சிறு பழ வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாகவும், அதுவரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் வணிகம் செய்யலாம் என்றும் உறுதியளித்தது. தற்போது புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டு 15 மாதங்களான நிலையிலும் சிறு பழ வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஆனால், புதிய ஆக்கிரமிப்புக் கடைகளை சட்ட விரோதமாக தனி நபர்கள் மூலமாக ஏற்படுத்தி நகராட்சி அலுவலர்களில் சிலர் தினசரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிடு தனிநபர் பணம் வசூலை கட்டுப்படுத்தவும், சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அப்போது, மாநில துணைச் செயலர் பெ.பாவாணன், அம்பேத்கர் சிறு பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் வீ.மண்ணாங்கட்டி, செயலர் கோ.சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.