மாற்றுத் திறனாளியைத் தாக்கிய காவலர் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயபால். இவர், திங்கள்கிழமை மாலை வேப்பூர் கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லத்தியால் தாக்குதல் நடத்தினார்.
இதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சி.சங்கர் (45) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயபாலை கடலூர் ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.