விருத்தாசலம் அருகே நியாய விலைக் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாகக் கூறி, பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள மண்ணம்பாடி கிராமத்தில், சிறுமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையிலிருந்து சுமார் ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் சர்க்கரை, இலவச அரிசி, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை இந்தக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. ஆனால், இந்த அரிசி ஈரப் பதத்துடன் ஒன்றுடன் ஒன்று ஒட்டிய நிலையில் தரமற்றதாக இருப்பதாகவும், அரிசியிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தரமற்ற அரிசியை கடை முன் கொட்டி, கடையை முற்றுகையிட்டனர். அதற்கு பதிலளித்த விற்பனையாளர், அரிசி மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டதாக தெரிவித்தார்.
எனவே, தற்போது வழங்கப்பட்ட அரிசிக்குப் பதிலாக தரமான அரிசி வழங்க வேண்டும். நியாய விலைக் கடைக்கு தரமான கட்டடம் கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.