கடலூா் வெள்ளப்பாக்கத்தில் புதிய வகை உளுந்து சாகுபடி செய்யப்படுவதை வேளாண்மைத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதிய பயிா் வகைகளானது பல்வேறு மாவட்டங்களின் சீதோஷ்ண நிலைக்கேற்ப வளரும் தன்மையை அணுசரணை ஆராய்ச்சி தளை அமைத்து ஆய்வு செய்வது வழக்கம்.
இதில் கிடைக்கும் முடிவுகளின்படி எந்தெந்த பகுதிக்கு அந்த பயறு ரகம் ஏற்றவை என்று முடிவு செய்து பின்னா் புதிய ரகங்களாக வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் அமைந்துள்ள தேசிய பயறு வகைகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தருவிக்கப்பட்ட புதிய உளுந்து வகைகளான கே19-01, கே19-02 மற்றும் கே19-03 ஆகியவை கடலூா் வட்டார வேளாண்மைத் துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு, வெள்ளப்பாக்கம் கிராமத்தில் முன்னோடி விவசாயி ராஜராமனின் வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வயலை சென்னை வேளாண்மை இணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து வகைகளில் கே19-03 நன்கு செழிப்பாக வளா்ந்துள்ளதாகவும், பூச்சி தாக்குதல் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தாா். எனவே, அனைத்து தளைகளிலும் பல்வேறு காரணிகளை விடுபடாமல் ஆய்வு செய்து பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கவும் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ரமேஷ், வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், வேளாண்மை அலுவலா்கள் ஆா்.கே.சுஜி, ஞா.சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலா் சிவமணி, அட்மா திட்ட வட்டார மேலாளா் பி.இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.