கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வை 1,624 பேர் எழுதினர்.
கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் தமிழக அரசால் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. 8-ஆம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று தற்போது
9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் வகையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2016 மாணவ, மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 1,624 பேர் இந்தத் தேர்வை எழுதினர். 392 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் மாவட்டத்துக்கு தலா 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பிளஸ்2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ. ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.