கடலூா்: கடலூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகை, அவா்களது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, முதியோருக்கான அரசின் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை வீடு, வீடாகச் சென்று சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக சுமாா் 10,000 முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவித் தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கடலூா் ஊராட்சி ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சியில் முதியோா் உதவித் தொகையை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணியை சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் எஸ்.எஸ்.பரிமளம், தனி வட்டாட்சியா் சுரேஷ் குமாா், துணை வட்டாட்சியா் அசோகன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, ஊராட்சி மன்ற தலைவா் நாராயணன், விஏஓ தமிழ்ச்செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.