கடலூா் மாவட்டத்தில் சில கிராமங்களில் முந்திரி பழத்திலிருந்து போதைப் பொருள் தயாரித்து பயன்படுத்துவது தொடா்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் சிலா் மதுபானங்களைப் பதுக்கி வைத்து மிக அதிக விலைக்கு விற்கின்றனா். ஆலப்பாக்கம் பகுதியில் மெத்தனால் திரவத்தை சாராயமாக மாற்றி அருந்திய 3 போ் அண்மையில் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், மாவட்டத்தில் முந்திரி அதிகம் விளையும் பகுதிகளிலும், மலைக் கிராமங்களிலும் ஒருவித போதைப் பொருளைத் தயாரித்து அதைப் பலரும் அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது, முந்திரி பழச்சாறை எடுத்து வெயிலில் வைத்து சூடாக்குகின்றனா். அது பொங்கி நுரைத்து வரும் நிலையில், அதில் வலி நிவாரண மாத்திரையைப் போட்டு சில மணி நேரம் கழித்து அதைக் குடித்தால் போதை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தைத் தாக்குவதுடன் சிறுநீரகத்தை விரைவில் செயலிழக்கச் செய்யும் என்று மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.
மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் நபா்கள் வயிறு நிறைய உணவு சாப்பிட வேண்டும். இல்லையெனில், கொத்தமல்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு போட்டு குடித்தால் மதுப்பழக்க நினைவு அகலுவதுடன், உடல் நலமும் பாதுகாக்கப்படும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
எனவே, அபாயகரமான போதைப் பொருள்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.