சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா பிரிவில் கூடுதலாக 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இந்த மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களிடம் காணொலிக் காட்சி மூலம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. சிதம்பரம் ராஜா முத்தையா
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பிரிவில்
மேலும் 250 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து மாவட்ட நிா்வாகம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் ‘கோவிட்-19’ அவசர ஊா்தியை ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, உதவி ஆட்சியா் விசுமகாஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.