சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவிற்கு இளைஞர் ஒருவர் ரோபோ கருவியை வழங்கியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தைய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதற்காக சிதம்பரத்தைச் சேர்ந்த முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஆர்.கேதார்நாத் மகன் பொறியாளர் கே.ராம்சுதன் ரூ.32 ஆயிரம் மதிப்பில் புதிய வடிவிலான ரோபோ கருவியை தானே உருவாக்கியுள்ளார். அந்த ரோபோ மூலம் நோயாளிகள் படுக்கை வரை சென்று உணவு மற்றும் மருந்துகளை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த ரோபோ கருவியில் உள்ள செல்போன் மூலம் இணையதள உதவியுடன் நோயாளிகளிடம் எப்படி உள்ளார்கள் என்பதை மருத்துவர்கள் கேட்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ராம்சுதன் சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பொறியியல் படிப்பு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோ கருவியை இளைஞர் ராம்சுதன், பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஆர்.கேதார்நாதன், பதிவாளர் ஆர்.ஞானதேவன், துணைவேந்தரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் யு.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.