
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிதம்பரம்: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது: தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியையும் வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு கட்சியினரும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக சில விஷயங்களை பேசுகிறார்கள். இதை குற்றம் என்று சொல்ல முடியாது. அதிமுக அமைச்சர்களும் அதுபோல் பேசியிருக்கலாம். அதிமுக என்பது ஒரு தனி கட்சி. பாஜக என்பது ஒரு தனிக்கட்சி. அதில் குழப்பம் உண்டாக்குவது தேவையில்லை.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் திமுகவினர் கிராமங்களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். பல இடங்களில் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அனுமதி இல்லை என்பது இது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அனுமதி அளிக்கப்படுகிறது. கோயில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் அனுமதிக்கப்படுவது இல்லை. இது முறையான விஷயம் இல்லை. அதிமுகவினர் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை ஏற்றுக் கொள்வது குறித்து எங்களது கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் வீடு கட்டுதல், கழிப்பறை கட்டுதல் போன்ற திட்டங்கள் அனைத்திற்குமே மத்திய அரசு நிதி தருகிறது. அதனால் வீடு கட்டும் இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் இவர்கள் நன்றி கெட்டவர்கள் என்றார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவாரே அவர்தானே என கேள்வி எழுப்பிவிட்டு, கமல்ஹாசன் தான் ஒரு முழு நேர அரசியல்வாதி என்றும், பிரஸ் மீட் கொடுக்கும்போது மட்டும் அரசியல்வாதி இருந்து விட்டு அதன் பிறகு வியாபாரியாக மாறும் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றார்.