சிதம்பரம்: ஆட்சியை தீர்மானிப்பது நடுநிலையான வாக்காளர்களின் வாக்குகள்தான். எனவே நடுநிலையாளர் வாக்குகளை பெற வேண்டும் தொண்டர்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலாளர் நாக.முருகுமாறன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் டி.கலியமூர்த்தி, எம்.ஜோதி பிரகாஷ் என்.சிவகுமார், ஆர்.பாலகிருஷ்ணன் வி.சுந்தரமூர்த்தி, ஜெ.விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு. முருகையன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளரும், சட்டம், நீதிமன்றம் சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் சி விசண்முகம் பேசியது: வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரு முக்கியமான தேர்தல் இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா இல்லாத தேர்தல் ஆதலால் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது மே 24 ஆம் தேதி தற்போதயை சட்டமன்றத்தின் கடைசி நாளாகும். அதற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். எப்போதும் இல்லாததது போல் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக கட்சி தொண்டனால் உருவாக்கப்பட்ட கட்சி. இரட்டை இலை சின்னம் இருப்பததால் தான் அதிமுக கட்சி வெற்றி பெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் இருக்கும் வரை யாராலும் கட்சியை அசைக்க முடியவில்லை. சின்னம் நம்மிடம் இருக்கும் வரை நம்மை யாராலும் அசைக்க முடியாது.
திமுக கட்சி ஒரு கட்சி அல்ல அது ஒரு குடும்ப கட்சி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்பி, எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சராக கூட ஆகலாம் . திமுக ஆட்சியை இழப்பதற்கு காரணம் திமுகவில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறுநில மன்னர்கள் போல் நடந்து கொள்வதால்தான். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் பூத்கமிட்டி உறுப்பினர்கள் குறைந்தது 10 வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் நாம் வெற்றி பெற நடுநிலையான வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்ததுதான் காரணம். அதே முறையை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஒருகட்சி ஆட்சியமைக்க நடுநிலையான வாக்களர்களின் வாக்குகளே காரணம் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் . மாவட்ட ஜெ பேரவை செயலாளர் ஜி.பாலசுந்தரம் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எல். குணசேகரன், மாவட்ட எம் ஜி ஆர் அணி செயலாளர் சி. நவநீதகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மருத்துவர். எஸ்.பாலசுப்ரமணியன், மாவட்ட தகவல் நுட்ப செயலாளர் ஆர்.மணிகண்டன், ஒன்றியக் குழு தலைவர்கள் குமராட்சி பூங்குழலி பாண்டியன், ஸ்ரீ முஷ்ணம் லதா ஜெகஜீவன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் எம் ஜி ஆர் தாசன் நன்றி கூறினார்.