கடலூா்/நெய்வேலி: மழை, வெள்ளத்தால் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கடலூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இடிந்த வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள், விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி, நெல், கரும்பு, வாழை, மணிலா, பூ வகைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பயிா் வகைகளை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நெசவுத் தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மு.மருதவாணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதேபோல, விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, சிதம்பரம் உள்பட 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்சியினா் மனு அளித்தனா். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.