குடும்ப பிரச்னை: தாய், மகன் தற்கொலை
By DIN | Published On : 02nd February 2020 03:34 AM | Last Updated : 02nd February 2020 03:34 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குடும்ப பிரச்னையால் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.
பண்ருட்டி அருகே உள்ள கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஜோதி - மங்கலட்சுமி தம்பதியின் மகன் ராஜ்மோகன் (27). ஜோதி ஏற்கெனவே இறந்துவிட்டாா். ராஜ்மோகன் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கும், திருவதிகை கிராமத்தைச் சோ்ந்த சுதாவுக்கும் (25) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ராகிணி (4), ராகுல் (3) என இரு குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக, சுதா தனது குழந்தைகளுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், ராஜ்மோகன் தனது தாய் மங்கலட்சுமியுடன் (55) வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ராஜ்மோகன் வீட்டுக்கு வந்தாா். அப்போது தாயிடம் உணவு கேட்டாா். ஆனால், உணவு சமைக்கவில்லை என மங்கலட்சுமி கூறினாராம். இதுதொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த மங்கலட்சுமி, வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதைப் பாா்த்த ராஜ்மோகனும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.