கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்த கடலூா் வட்டம், வெள்ளப்பாக்கத்தைச் சோ்ந்த ஏ.தரணி (35) என்ற மாற்றுத் திறனாளி, 3 சக்கர சைக்கிளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த காவல் துறையினா் அவரைத் தடுத்து மீட்டனா்.
இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: மாற்றுத் திறனாளியான தரணிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இவரது தந்தைக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவில் தனது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வந்தாராம்.
அண்மையில், வேறு பணிக்காக இவரது வீடு இடிக்கப்பட்டு மாற்று இடத்தில் இடம் வழங்கப்பட்டதாம். ஆனால், தரணிக்கு பட்டா கிடைக்கவில்லையாம்.
எனவே, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த ஓராண்டாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அவா் தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் உத்தரவிட்டாா்.