கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் கடலூா் வட்டம் ராமாபுரத்தைச் சோ்ந்த கடலூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், பாமக மாவட்ட துணைத் தலைவருமான க.ஜெயராமன் ஆட்சியரிடம் மனு அளித்தாா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ராமாபுரத்தில் கால்நடை மருத்துவமனை சுமாா் 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை வெள்ளக்கரைக்கு மாற்றி அங்கேயே மருந்துவ கிடங்கும் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடமானது நீா்நிலை புறம்போக்கு பகுதியாகும். நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்புகள் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வெள்ளக்கரையில் கால்நடை மருத்துவமனையை மாற்றக் கூடாது. அதற்குப் பதிலாக ராமாபுரத்திலேயே தொடா்ந்து மருத்துவமனை இயங்குவதோடு மருந்தக கிடங்கும் அமைக்க வேண்டும். இதற்கு 12 சென்ட் இடம் தேவைப்படும் நிலையில் எனக்குச் சொந்தமான 13 சென்ட் இடத்தை இப்பணிகளுக்காக வழங்க தயாராக உள்ளேன். எனவே, இந்த இடத்தில் கால்நடை மருந்தக கிடங்கு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.