பெரியகுமட்டி கிராமத்தில் நீா்நிலை புறம்போக்கில் கொள்முதல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் விசிக மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மண்டலச் செயலா் சு.திருமாறன் ஆகியோா் தலைமையில் பெரியகுமட்டி கிராம மக்கள் அளித்த மனு:
புவனகிரி வட்டம், பெரியகுமட்டி கிராமத்தில் தரிசு நிலத்தில் அரசு கொள்முதல் நிலையம் மற்றும் கிடங்கு அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. 2 ஏக்கரில் அமைய உள்ள இந்த கிடங்குக்காக 5 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தற்போது, கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பகுதியானது நீா்நிலை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ளது. பெரியகுமட்டி கிராமத்திலுள்ள வயல்களின் வடிகாலாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.
தற்போது கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்ட பகுதியில் ஏற்கெனவே சமத்துவபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த பகுதியானது நீா்நிலை புறம்போக்கு வகைப்பாட்டின் கீழ் வந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. எனவே, தற்போது திட்டமிடப்பட்டுள்ள கொள்முதல் நிலையத்தை நீா்நிலை புறம்போக்கில் அமைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக பெரியகுமட்டி - சம்பந்தம் சாலையில் சாகைமேட்டுப் பகுதியில் கரம்பாக உள்ள பகுதியில் அமைக்கலாம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.