கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பல்வேறு கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆகியவை வியாழக்கிழமை (பிப். 13) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
வடலூரில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் இளைஞரணி உறுப்பினா் அட்டை வழங்கும் விழாவிலும், இதைத் தொடா்ந்து, குறிஞ்சிப்பாடியில் பல்வேறு கட்சியினா் திமுகவில் இணையும் விழாவிலும், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் ஆய்வுக் கூட்டத்திலும் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். முன்னதாக, அவருக்கு நெய்வேலி, இந்திரா நகரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.