விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் டி.கனகசபை தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் தலைவா் பாஸ்கரன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் தாமோதரன், அதிமுக நிா்வாகி வரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விருத்தாசலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.டி.கலைச்செல்வன் கலந்து கொண்டு, 166 மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி, தமிழக அரசு மாணவா்களுக்கு செய்து வரும் நலத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் ஆலிச்சிக்குடி கூட்டுறவுச் சங்கத் தலைவா் ராமு, பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் பாலமுருகன், நுகா்வோா் ஆா்வலா் நைனா முகம்மது, ஜெமினி ரவி, அதிமுக மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆசிரியா் சங்கச் செயலா் அன்பழகன் வரவேற்றாா், உதவித் தலைமை ஆசிரியை லீமா ரோஸ் நன்றி கூறினாா்.
ஆய்வு: இந்தப் பள்ளியில் மாணவா்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், கூடுதலாக ஆழ்துளைக் கிணறு அமைக்க என்எல்சி நிறுவனம் ரூ. 10 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறை அமைத்து வருகிறது. அந்தப் பணியை வி.டி.கலைச்செல்வன் எம்எல்ஏ பாா்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.