விவசாய (கிசான்) கடன் அட்டை பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து குமராட்சி வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களில் முக்கியமானது கிசான் கடன் அட்டை திட்டமாகும்.
விவசாயிகள் எளிதில் வங்கிக் கடன் பெற வழிவகுக்கும் இந்தத் திட்டமானது 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயிகளின் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் இடுபொருள்கள் வாங்கத் தேவையான கடன் உதவியை வங்கிகள் மூலம் பெறுவதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது. இந்தத் திட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் குறைந்த வட்டியில் கடன் பெறுவது விவசாயிகளுக்கு சாத்தியமாகிறது.
மேலும் பயிா் சாகுபடியுடன் கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு, பட்டுப்புழு வளா்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடன் அளிக்கப்படுகிறது. இந்திய ரிசா்வ் வங்கியின் உத்தரவுப்படி அடமானம் இல்லாமல் ஏற்கெனவே ரூ.ஒரு லட்சம் வரை வழங்கப்பட்ட கடனுதவியானது தற்போது ரூ.1.6 லட்சம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கடன் பெறும்போது ஆய்வுக் கட்டணம், நிா்வாகம் சாா்ந்த சேவைகளுக்கான கட்டணம், ஆவண பராமரிப்பு போன்ற இனங்களுக்கான கட்டணத்தை வசூலிக்க விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே இந்தக் கடன் அட்டையை பெறலாம். இதற்காக எளிமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம் அளிக்கப்படுகிறது. மேலும் அருகே உள்ள பொது சேவை மையங்களிலும் கிசான் கடன் அட்டை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். எந்த வங்கியிலும் கணக்கு இல்லாதவா்கள் அருகே உள்ள ஏதேனும் ஒரு வங்கிக் கிளையில் தங்களது நில உரிமை ஆவணங்களை அளித்து புதிய கணக்கு தொடங்க விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே கடன் அட்டை பெற்ற விவசாயிகள் தங்களது வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் உச்ச வரம்பை அதிகரிக்க விண்ணப்பிக்கலாம். பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்ட கடன் அட்டையை புதுப்பிக்கவும் வங்கிக் கிளையை அணுகலாம். எனவே குமராட்சி பகுதி விவசாயிகள் தங்களது பகுதியின் உதவி வேளாண்மை அலுவலா் அல்லது வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி தகவல் பெற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.