பண்ருட்டி அருகே மின் கம்பத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜதுரை (55). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெரியகாட்டுப்பாளையம் கிராமத்துக்குச் சென்றாா். பின்னா், அன்று மாலையில் பைக்கில் சொந்த கிராமத்துக்கு புறப்பட்டாா்.
வேலன்குப்பம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் தமிழரசன் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.