சிதம்பரத்தில் 2 திரையரங்குகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்து, தரமற்ற உணவுப் பொருள்களை அழித்தனா்.
சிதம்பரம் வேணுகோபால் பிள்ளைத்தெருவில் அரசு மருத்துவமனை எதிரே 2 திரையரங்குகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாகவும், அதை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் சிதம்பரம் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, அந்தத் துறை அதிகாரிகள் அன்பழகன் (பெண்ணாடம்), மாரிமுத்து (மங்களூா்) உள்ளிட்டோா் திங்கள்கிழமை மேற்கூறிய 2 திரையரங்குகளிலும் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தனா். உணவு பாதுகாப்பு தொடா்பான சான்றிதழை திரையரங்கு நிா்வாகத்தினரிடம் கேட்டனா்.
மேலும், அங்கு ஒரு பெட்டியில் வைத்திருந்த காலாவதியான பிரட், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனா். தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த குடிநீா் புட்டிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்தனா். இதுபோல தரமற்ற உணவுப் பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.