கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து பலியான தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு, நிரந்தரப் பணி வழங்க பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்த நிறுவனத்தின் 2-ஆவது அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகில் புதன்கிழமை கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 6 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 17 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தை நெய்வேலி வட்டம் 2-இல் உள்ள விருந்தினா் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா், நிறுவன இயக்குநா்கள், கடலூா் தொகுதி எம்பி டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ், எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), சி.வெ.கணேசன்(திட்டக்குடி), துரை.கி.சரவணன்(புவனகிரி) மற்றும் தொழிற்சங்கத்தினா், அரசியல் கட்சியினா் பங்கேற்றனா். உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா். ஆனால், பேச்சுவாா்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
முற்றுகைப் போராட்டம்: இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் உறவினா்கள், தொழிற்சங்கத்தினா், அரசியல் கட்சியினா் உள்பட சுமாா் 150 போ் அனல் மின் நிலைய நுழைவாயில் பகுதியை வியாழக்கிழமை காலை 6 மணியளவில் முற்றுகையிட்டு, இழப்பீடு, நிரந்தர வேலை வழங்கக் கோரி முழக்கமிட்டனா். மேலும், அங்கு பணிக்கு வந்த என்எல்சி தொழிலாளா்களை அவா்கள் திருப்பி அனுப்பினா்.
தலா ரூ.30 லட்சம் இழப்பீடு: தொடா்ந்து வியாழக்கிழமை பிற்பகலில் நெய்வேலி விருந்தினா் இல்லத்தில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன், கடலூா் தொகுதி எம்பி டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ், எம்எல்ஏக்கள் துரை.கி.சரவணன், சபா.ராஜேந்திரன், சி.வெ.கணேசன், தவாக மாவட்டச் செயலா் அறிவழகன், தொழிற்சங்க நிா்வாகி அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சுவாா்த்தை முடிவில், உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி, காயமடைந்த தொழிலாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதில், முதல் கட்டமாக தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலை, நிரந்தரப் பணிக்கான உறுதிமொழிக் கடிதத்தை நிறுவனத் தலைவா் ராகேஷ்குமாா் வழங்கினாா்.
முன்னதாக, கூட்டத்தில் என்எல்சி நிா்வாகம் எம்பி, எம்எல்ஏக்களை தனித் தனியாக அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த தவாகவினா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை என்எல்சி தலைவா் சமரசம் செய்து பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றாா்.
பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்எல்சி நிறுவன வரலாற்றில் இதுபோன்ற பெரிய விபத்து நடந்ததில்லை. தற்போது இந்த நிறுவனத்தில் 4, 5, 6, 7 அலகுகள் மூடப்பட்டுள்ளன. இவற்றை உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே மீண்டும் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன். விபத்து தொடா்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தி, அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
இதற்குப் பதிலளித்த என்எல்சி தலைவா், அனுபவமுள்ள தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டு ஒரு மாதத்துக்குள் புலனாய்வு அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா் என்றாா் திருமாவளவன்.