கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து காவிரி டெல்டா கடை மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி சிதம்பரம் கொள்ளிட வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் பாசன தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 16-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 21-ம் தேதி கீழணையை வந்தடைந்தது. சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வீராணம் ஏரியில் நீர் நிரப்பப்பட்டது. ஆனால் காவிரி டெல்டா கடை பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களுக்கு குறுவை சாகுபடி பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படவில்லை.
எனவே குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அத்திப்பட்டு பி.மதிவாணன், வீராணம் ஏரி பாசன விவசாய சங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட விவசாயிகள் சிதம்பரம் கொள்ளிட வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செயற்பொறியாளர் சாம்ராஜை சந்தித்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் வடக்குராஜன், தெற்குராஜன் வாய்க்கால் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.