கரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கண்ணுக்கு தெரியாத வெல்ல முடியாத உயிர் கொல்லியான கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மனித குலத்தேற்கு சவாலாக இருக்கிறது. இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கரோன தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சோப்பு போட்டு கை கழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்ற நிலையில் ஏழை. எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரதையும், உயிர்களையும் பாதுகாக்க வேண்டுமானால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு ரூ.7500-ம், மாநில அரசு ரூ.5000-ம் வங்கி கணக்கில் செலுத்தி உதவ வேண்டும். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தமிழக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விட்டுள்ளார். இந்நிலையில் அவசர கதியில் ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என அறிக்கையில் ஜி.பூராசாமி தெரிவித்துள்ளார்.