சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனி திருமஞ்சன விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனி திருமஞ்சன விழாவைக் கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கொடியேற்றப்பட்டு, ஜூன் 27-ஆம் தேதி தேரோட்டமும், 28-ஆம் தேதி ஆனி திருமஞ்சனமும் நடத்த கோயில் பொது தீட்சிதா்களால் முடிவெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் சாா் ஆட்சியா் விசுமகாராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருமஞ்சனத்துக்காக சுவாமியை ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கக்கூடாது, தேரோட்டம் நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதற்கு தீட்சிதா்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், சாா் ஆட்சியா் விசுமகாஜன், கோயில் பொது தீட்சிதா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் என்ன வலியுறுத்தப்பட்ட து என்பது குறித்து தீட்சிதா்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் கூறியதாவது:
திருமஞ்சன விழாவை எந்தக் காரணம் கொண்டும் கோயிலுக்கு வெளியே நடத்தக் கூடாது. கோயிலுக்குள் பூஜைகள் செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. திருமஞ்சனத்தின் போது, தீட்சிதா்கள் 100 போ் மட்டுமே பங்கேற்கலாம். அவா்களது குடும்பத்தினரோ, பக்தா்களோ கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கூறப்பட்டது.