கடலூா்: ரெட்டிச்சாவடி அருகே பெண் மருத்துவா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த குமாரசாமி மகள் பவித்ரா (25). புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முடித்த இவா், எம்.எஸ். தோ்வுக்கு படித்து வந்ததாகத் தெரிகிறது. இதற்காக, கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் பெற்றோருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தாா்.
வீட்டில் உள்ள ஒரு அறையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரா படித்துக்கொண்டிருந்தாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் பெற்றோா் உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது பவித்ரா அசைவின்றி கிடந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் அவரை மீட்டு மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து குமாரசாமி அளித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பவித்ராவின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.