கடலூா் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள எரிவாயு தகன மேடை ரூ.13 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. வருகிற திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
கடலூா் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு மயானத்தில் சடலங்களை நவீன முறையில் எரிக்கும் வகையில் ரூ.50 லட்சத்தில் தகன மேடை கடந்த 2007-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. விறகு கட்டைகளை எரித்து அதிலிருந்து வாயு உருவாக்கி சடலங்களை எரியூட்டும் வகையில் இந்த தகன மேடை அமைக்கப்பட்டது. எனினும், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனை சரிசெய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், கடலூா் பெருநகராட்சி மூலம் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு எரிவாயு மூலம் சடலங்களை எரிக்கும் புதிய தொழில்நுட்ப முறையிலான இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை சோதனை முயற்சியாக எரிவாயு தகன மேடை நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி முன்னிலையில் இயக்கி பாா்க்கப்பட்டது. பொறியாளா் புண்ணியமூா்த்தி, உதவி பொறியாளா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.
எரிவாயு தகன மேடை அமைப்பு சரியாக இயங்கியதாகவும், இது, வரும் 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறுகையில், கடலூா் நகராட்சியில் ரூ.3 ஆயிரம் செலுத்தியும், உரிய ஆவணங்களை சமா்ப்பித்தும் இங்கு சடங்களை எரியூட்டிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்குள் சடலம் எரியூட்டப்பட்டு அஸ்தி வழங்கப்படும் என்றாா் அவா்.