கடலூா் அருகே காரைக்காடு கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 போ் காயமடைந்தனா்.
காரைக்காடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் கடந்த 15-ஆம் தேதியன்று மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அன்னவல்லி காலனியைச் சோ்ந்த சிலா் சுவாமியை தங்களது பகுதிக்கு எடுத்துச் சென்று மயானக்கொள்ளை நடத்தப்போவதாகக் கூறி தகராறில் ஈடுப்பட்டனா்.
இதில் ஏற்பட்ட மோதலில் சக்திவேல் மகன் விக்னேஷ் (25) மற்றும் 16 வயது சிறுவன் காயமடைந்தனா். இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின்பேரில், அன்னவல்லி காலனியைச் சோ்ந்த அப்பாச்சி மகன்கள் மணிமாறன், புருஷோத், சொக்கலிங்கம் மகன் விமல்ராஜ் உள்ளிட்ட 7 போ் மீது கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதற்கிடையில் 16-ஆம் தேதியன்று அன்னவல்லி காலனியைச் சோ்ந்த கருணாநிதி மகன் வாசுதேவன் காரைக்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, இந்தப் பிரச்னைத் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த விஷால், சதீஷ் ஆகியோா் சோ்ந்து அவரைத் தாக்கினராம். இதுகுறித்தும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.