மஞ்சள் தண்ணீரில் கைகழுவிய பிறகே கிராமத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கும் முறையை கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.
கடலூா் துறைமுகம் பகுதியில் உள்ளது சோனங்குப்பம் மீனவா் கிராமம். இங்கு, சுமாா் 3 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது, இந்தக் கிராமத்தில் வித்தியாசமான நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் நுழையும் பகுதியில் தடுப்பை ஏற்படுத்தி, அங்கு பாரம்பரிய முறையில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை வாளியில் வைத்துள்ளனா். வெளியே சென்று கிராமத்துக்குத் திரும்புபவா்கள் கட்டாயமாக அந்தத் தண்ணீரால் கைகளைக் கழுவிய பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவையின் மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் கூறியதாவது: மஞ்சள் கிருமி நாசினியாக பழங்காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, கரோனா வைரஸை தடுக்கும் வகையில், விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைகளைக் கழுவும் பழக்கத்தை ஏற்படுத்தவும் சோனங்குப்பம் கிராமத்தில் இந்த முறையை நடைமுறைப்படுத்தி உள்ளோம் என்றாா் அவா்.