சிதம்பரம் அருகே குறியாமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடைத்து திருட முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்கண்ட இருவரை பிடித்த காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலம் கிராமத்தில் அரசு மதுபானக்கடை உள்ளது. புதன்கிழமை இரவு தலைமைக்காவலர் விவேகானந்தன் என்பவர் இரவு ரோந்து சென்ற போது மேற்கண்ட டாஸ்மாக் கடையை ஆயிபுரத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் மகன் முத்து (23), ராதாகிருஷ்ணன் மகன் மதிவாணன் (23) ஆகிய இருவரும் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
அப்போது ரோந்து வந்த காவலர் விவேகானந்தன் மேற்கண்ட இருவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து புவனகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், டாஸ்மாக் கடையை உடைத்து திருட முயன்ற இருவரை பிடித்த காவலர் விவேகானந்தனை பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.